பச வண்ண - கோலாட்டத் திருவிழா (Basavanna Festival)
ஓர் சமயம் சாபத்தால் அவதியுற்ற நந்தி சாப விமோசனம் வேண்டி விஷ்ணு பெருமாளை நோக்கி தவம் செய்ததாகவும் அதன் பலனாக சாபம் நீங்கி கைலாயம் திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வை நினைவுறுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத அமாவாசையை அடுத்த பத்து நாட்களுக்கு "பச வண்ண - கோலாட்டத் திருவிழா " கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவில் வெகு விமரிசையாக நடத்தப்படும் இவ்விழா மதுரையில் சௌராஷ்டிர மக்களால் முன்னெடுத்து செல்லப் படுகிறது. தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் அமைந்த சௌராஷ்டிர சமூக மக்களின் கோவிலான "ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் " தலத்தில் வருடம் தவறாமல் இந்நிகழ்வு "பொஸ்கண்ணா தின்னாள்" என்ற பெயரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நடை சாற்றிய மதிய வேளையில் கர்பகிரகத்தை தாண்டி வெளிவட்டத்தில் இருக்கும் மண்டபத்திற்கு அருகே அமைந்துள்ள கண்ணாடி அறையில் தங்கத்தாலான நந்தி வைக்கப்படுகிறது பின் களிமண்ணால் ஆன நந்தியை மக்கள் கொண்டு வர அதையும் அதே அறையில் வைக்கிறார்கள். இளம் பெண்கள் அதைச் சுற்றி கோலாட்டம் ஆட இத்திருவிழா தொடங்கி வைக்கப்படுகிறது. அடுத்த பத்து நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவை மக்கள் கண்டும் கோவில் பிரகாரத்தில் கிடைக்கும் சுண்டல், கடலை, ஜவ்வு மிட்டாய் போன்ற தின்பண்டங்களை உண்டும் மகிழ்கிறார்கள்.
பதினொன்றாம் நாள் மண்ணாலான நந்தியை (மஞ்சனக்காரத் தெரு, மயூரி சில்க்ஸ் அருகில்) மூன்று சாலைகள் சந்திக்கும் முச்சந்தியில் அமைந்த கிணற்றில் கரைத்து விடுகிறார்கள். காலப்போக்கில் அக்கிணறு இல்லாமல் ஆகிவிட சௌராஷ்ட்ரா ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் அமைந்த கிணற்றுக்கு அருகே களி மண் நந்தியை கொண்டு வைத்து விழாவை நிறைவு செய்கிறார்கள்.
பச வண்ண என்றால் நந்தி என்று பொருள். காலப்போக்கில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் இவ்விழா தன் பொலிவை இழந்திருந்தாலும் சைவ வைணவ நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கொண்டாடப்படும் "பச வண்ண - கோலாட்டத் திருவிழா" பால்யகால நினைவாக பலரின் மனதிலும் தொடர்ந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை!!!
பின் குறிப்பு : மேல் கூறிய தகவல் வாய் வழிச் செய்தியாக பெறப்பட்டது. இதைப் பற்றி மேலதிக விவரங்கள் அறிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சொன்னவர் : துளசி
Comments
Post a Comment